

வேலூர்: கணவரை பிரிந்து வாழும் நிலையில் கும்பலாக வந்து குழந்தையை கடத்தி சென்றதாக கணவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரியா. இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த மென்பொறியாளர் ரவி என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு குடும்பத்தாரால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனது பெண் குழந்தையுடன் தொரப்பாடியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்தார்.
பிரியா கடந்த 2019-ம் ஆண்டு முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு வேலூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது 6 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் வீட்டில் உறங்க வைத்துவிட்டு மருந்து வாங்க பிரியா மருந்தகத்திற்கு சென்றிருந்த நிலையில், அங்கு நான்கு நபர்களுடன் முகக்கவசம் அணிந்து வந்த பிரியாவின் கணவர் ரவி வீட்டில் இருந்த பிரியாவின் தாயை தாக்கிவிட்டு உறங்கிக்கொண்டிருந்த 6 வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் காரில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பிரியா, இது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இச் சம்பவங்கள் அனைத்தும் பிரியாவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் நான்கு நபர்களுடன் உள்ளே நுழையும் ரவி, பிரியாவின் தாய் மற்றும் அருகில் இருக்கக்கூடிய வீட்டினரையும் தாக்கிவிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக பிரியா கூறுகையில் தனது மீது அதிக சந்தேகம் பட்டு தாக்கியதாகவும், குழந்தையையும் தாக்கியதாகவும் இதனாலேயே நான் எனது அம்மாவீட்டுக்கு வந்துவிட்டேன். இதே போல் கடந்த 2020-ஆம் ஆண்டு எனது குழந்தையை கடத்திச் செல்ல முயற்சி செய்துள்ளார். எனது குழந்தைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, மிகவும் அச்சமாக உள்ளது. காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுத்து எனது குழந்தையை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.