வாணியம்பாடி அருகே உடல்நிலை சரியில்லாமல் இறந்த மூதாட்டியின் சடலத்தை மலை கிராமத்திற்கு சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் டோலிகட்டி நடந்தே தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நெக்னாமலை என்னும் மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமம் மலையடிவாரத்தில் இருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் இந்த மலைகிராமத்தில் சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளைக் கடந்தும் சாலை வசதியின்றி அனைத்து தேவைகளுக்கும் மலை அடிவாரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தினமும் நடந்து சென்று வருகின்றனர்.
இதையும் படிக்க | கலகத் தலைவன் திரைப்படத்தின் ‘ஹே புயலே’ பாடல் வெளியீடு
இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தரக்கோரி அரசுக்கு பல முறை கோரிக்கை மனுக்களை அளித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஒவ்வொரு உள்ளாட்சி, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க மட்டுமே வருகின்றனர். வெற்றி பெற்ற பின்னர் அந்த மலை கிராமத்திற்கு வருவதுமில்லை, வாக்குறுதிகளை நிறவேற்றுவதும் இல்லை என மலை கிராம மக்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இதையும் படிக்க | 7 ஆண்டுகளாக பாஜக என்ன செய்தது? காங்கிரஸ் தலைவர் கேள்வி
அங்கு பிழைக்க வழி இல்லாததால் பிழைப்பு தேடி அங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்வோர் திடீர் மரணம் ஏற்பட்டால் அவர்களை அடக்கம் செய்ய அவருடைய சொந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் 7 கிலோ மீட்டர் சடலத்தை டோலிகட்டி எடுத்துசெல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி எல்லம்மாள் என்பவர் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் சடலத்தை மூங்கில் பிரம்பு மூலம் டோலிகட்டி அந்த மலை கிராமமக்கள் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த நெக்னமலை கிராமத்திற்கு தூக்கி சென்ற காட்சி கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும் சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வரும் மலை கிராம மக்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்