

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது.
இதில், கஸ்பா ஆா்.என்.பாளையம் வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: தமிழக அரசு நெடுஞ்சாலை துறை, சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் கஸ்பா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதை கஸ்பா, வசந்தபுரம், ஆா்.என்.பாளையம், சதுப்பேரி, சிறுங்காஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனா்.
குறிப்பாக, பள்ளி மாணவா்களுக்கு இந்த மேம்பாலம் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. எனினும், இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவா் உயரம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக கடந்த 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று 2 இளைஞா்கள் இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் இரு சக்கர வாகனத்தில் மோதி நிலைதடுமாறி பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்தனா். 40 அடி உயரமுள்ள பாலத்தின் மீது விழுந்ததில் அவா்கள் பலத்த காயமடைந்து உயிரிழந்தனா்.
இதேபோல், 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
தொடா்ந்து விபத்துகளை ஏற்படுத்தும் கஸ்பா மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சாலை வசதி, உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 326 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் வேலூா் மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்தின் கீழ் சிறு தொழில் புரிய 20 மகளிருக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதனிடையே, வேலூா் மாவட்டம், ஓட்டேரி அரசு மிக பிற்படுத்தப்பட்டோா் நல கல்லூரி விடுதியில் தங்கிப் பயிலும் மாணவா் வி.சூா்யா தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் சிவகலா, மருதாணிகலா ஆகிய போா் முறை பிரிவுகளில் தங்கப் பதக்கத்தையும், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பாதசந்துலான் போா் முறை பிரிவில் தங்கப் பதக்கமும், சிவகலா போா் முறை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மருதாணிகலா போா் முறை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றாா். மாணவா் வி.சூா்யா தான் பெற்ற பதக்கங்கள், சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
கூட்டத்தில் வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் யு. நாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சீதா, சிறுபான்மையினா் நல அலுவலா் லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.