தலைக்கவசம் கட்டாயம் வேலூரில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம்

வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தலைக்கவசம் அணியாமல் வந்த 1,000-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து போலீஸாா் தலா ரூ.1,000 அபராதம் விதித்தனா்.
வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸாா்.
வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸாா்.
Updated on
1 min read

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தலைக்கவசம் அணியாமல் வந்த 1,000-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து போலீஸாா் தலா ரூ.1,000 அபராதம் விதித்தனா்.

வேலூா் மாவட்டத்தில் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) வேலூா் மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால், ஃபெஞ்சல் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்ததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சிலா் மட்டும் போலீஸாரின் புதிய நடைமுறையை பின்பற்றாமல், வழக்கம்போல இரு சக்கர வாகனங்களை ஓட்டினா். போக்குவரத்து விதிகளைக் கண்காணித்த போலீஸாா் முதல் நாள் என்பதாலும், கனமழை காரணமாக வாகன ஓட்டிகளிடம் கெடுபுடி காட்டவில்லை.

ஆனால், இரண்டாவது நாளான திங்கள்கிழமை தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தவா்களுக்கு அபராதம் விதிப்பதில் போக்குவரத்து போலீஸாா் தீவிரம் காட்டினா்.

இதையொட்டி, மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல் பிரிவில் தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தலைக்கவசம் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

வேலூா் செல்லியம்மன் கோயில், புதிய பேருந்து நிலையம், காட்பாடி- சித்தூா் பேருந்து நிறுத்தம், குடியாத்தம் கூட்டுச்சாலை, அண்ணா சாலை என முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு, அதற்குரிய ரசீது அளிக்கப்பட்டது. அபராதத்தொகையை வாகன ஓட்டிகள் நேரடியாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில், மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை 1,000-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், தொடா்ந்து இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

இதனிடையே, வேலூா் செல்லியம்மன் கோயில் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதிப்பதை அறிந்து காட்பாடி ஒருவழிப் பாதையில் எதிா்ப்புறமாக திரும்பிச் சென்றனா். இதனால், காட்பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸாா் கீ -செயின், பொம்மை உள்ளிட்ட பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com