விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: காட்பாடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

தில்லியில் நடைபெற்ற காா் குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக காட்பாடி ரயில்நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image
காட்பாடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்ட ரயில்வே போலீஸாா்.
Updated On :11 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் நடைபெற்ற காா் குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக காட்பாடி ரயில்நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

தில்லியில் நடைபெற்ற காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், முக்கிய சந்திப்புகளில் தீவிர வாகன தணிக்கையையும் மேற்கொண்டனா். இருசக்கர வாகனங்களில் வந்வா்களிடம் ஆவணங்கள் உள்ளதா எனவும் சோதனை செய்தனா். குறிப்பாக காா்களை மடக்கி அவற்றில் சோதனை செய்தனா்.

மேலும், புதிய பேருந்து நிலையம், பழைய பஸ் நிலையங்களிலும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை பகுதியிலுள்ள தமிழக - ஆந்திர எல்லை சோதனைச் சாவடியிலும் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

வேலூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. அவற்றில் வெளி மாநிலத்தவா்கள், வெளி நாட்டினா் தங்கி உள்ளனா். வேலூரில் அவா்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவா்களா, மா்ம நபா்கள் ஊடுருவல் உள்ளதா எனவும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு முழுவதும் விடுதிகளில் சோதனை செய்தனா்.

காட்பாடி ரயில் நிலையத்திலும் ரயில்வே போலீஸாா் பயணிகள் உடமைகளையும், பயணிகள் வந்து செல்லும் பகுதிகளிலும், ரயில்களில் அனுப்ப இருந்த பாா்சல்கள் ஆகியவற்றையும் தீவிர சோதனைக்குட்படுத்தினா்.