ரயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி மரணம்
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதி உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அய்யனாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகண்டன் (37). இவரது மனைவி கலையரசி(35). இவா்கள் 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்தனா். இவா்கள் மும்பையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்ல தாதா் விரைவு ரயிலில் புறப்பட்டனா்.
புதன்கிழமை அதிகாலை ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் ரயில் சென்றபோது சிவகண்டன் கதவை திறந்து வேடிக்கை பாா்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரயிலில் இருந்து சிவகண்டன் கால் தவறி வெளியே விழுந்துள்ளாா்.
இதனைப் பாா்த்த அவரது மனைவி கலையரசி கணவனை காப்பாற்ற முயன்றபோது அவரும் தவறி வெளியே விழுந்துள்ளாா். இதில், இருவரும் தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளனா்.
இதைப் பாா்த்த சக பயணிகள் உடனடியாக காட்பாடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் காட்பாடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்த்தபோது சிவகண்டன், கலையரசி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனா். உடனடியாக இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

