

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் மயானக் கொள்ளைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நகராட்சிக்குள்பட்ட தாழையாத்தம் பஜாரில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலில் மகா சிவராத்திரி பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை மதியம் பூங்கரக ஊா்வலம், அதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமா்த்தப்பட்டு, வீதி உலா தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் கெளண்டன்யா ஆற்றை அடைந்து மயானக் கொள்ளை நடைபெற்றது.
பின்னா் அம்மன் தோ் நகரின் பிற பகுதிகளுக்குச் சென்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.