தவிக்கிறது திருமுருகன்பூண்டி சிற்பத்தொழில்!

திருப்பூர், நவ.20:   பனியன் தொழிலுக்கு அடுத்தபடியாக திருப்பூரின் பெயரை உலகளவில் உயர்த்திக் கொண்டுள்ள திருமுருகன்பூண்டி சிற்பத் தொழிலின் வளர்ச்சி போதிய பயிற்சிக் கூடம் இல்லாததாலும்,சிற்பக் கலைஞர்களுக்க
Updated on
2 min read

திருப்பூர், நவ.20:   பனியன் தொழிலுக்கு அடுத்தபடியாக திருப்பூரின் பெயரை உலகளவில் உயர்த்திக் கொண்டுள்ள திருமுருகன்பூண்டி சிற்பத் தொழிலின் வளர்ச்சி போதிய பயிற்சிக் கூடம் இல்லாததாலும்,சிற்பக் கலைஞர்களுக்கானசலுகைகள் கிடைக்கப்பெறாமலும் தடைபட்டுள்ளது.     இப்பாரம்பரிய கலைத்தொழிலைப் பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர் மக்கள்.

 தமிழகத்தில் மகாபலிபுரம், மயிலாடுதுறை, பழனி, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி மற்றும் திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகள் சிற்பக் கலைக்குப் பெயர்பெற்றுள்ளன.  இதில் மகாபலிபுர சிற்பங்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. அதுபோன்று சிற்பங்கள் உருவாக்கத்தில் திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பெயர் பெற்றது. கி.பி.1341ல் ஹரிஹரபுக்கர் விஜயநகர மன்னன் அழைப்பை ஏற்று கர்நாடக மாநிலத்திலிருந்து திருமுருகன்பூண்டிக்கு வந்த சிற்பிகளின் வழித் தோன்றல்களாக தற்போது 40க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள் உள்ளன.

   அதில் 300க்கும் மேற்பட்ட சிற்பிகள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

 இங்கு தயாராகும் சிற்பங்களுக்குத் தேவையான கருங்கற்கள் திருப்பூரை அடுத்துள்ள ஊத்துக்குளி பகுதியிலிருந்து கிடைக்கின்றன.

வளர்ச்சியில்லை: இப்பகுதியில் உருவாக்கப்படும் சிற்பங்கள் உள்நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன், தென்ஆப்பிரிக்கா, வியட்நாம், ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட அயல்நாடுகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களையும் அலங்கரித்துள்ளன. பனியன் வர்த்தகம் மட்டுமின்றி கலைநயத்தாலும் உலகநாடுகளை திரும்பிப் பார்க்க வைக்கும் திருப்பூர் திருமுருகன்பூண்டி சிற்பக்கலை மேன்மேலும் வளர முடியாமல் தவித்து வருகிறது.

    தற்போது இத்தொழிலில் 50 வயதைக் கடந்தவர்களே அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.  அவர்களைத் தொடர்ந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இச்சிற்பத்

தொழிலைத் தொடர்கின்றனர்.  சிற்பக்கலை தொடர்பான புத்தகங்கள் சமஸ்கிருதம் உள்ளிட்ட வடமொழிகளில் உள்ளன.

தமிழகத்தில் மாமல்லபுரத்தை அடுத்து சிற்பத்தொழிலுக்கென வேறு இடங்களில் பயிற்சி நிறுவனங்கள் இல்லாததும் இக்கலை வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறது.

வறுமையில் சிற்பிகள்: தமிழகத்தின் கலைநயத்தை உலகளவில்

பறைசாற்றும் திருமுருகன்பூண்டி சிற்பக் கலைஞர்களுக்கு குறைந்த அளவிலேயே கூலி வழங்கப்பட்டு வருகிறது.

 இதற்கிடையே, திருப்பூர் பனியன் தொழில் வளர்ச்சி காரணமாக அப்பகுதியில் வீட்டு வாடகை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் சிற்பத் தொழிலாளர் குடும்பங்கள்வறுமையில் வாடிவருகின்றன.

 அத் தொழிலாளர்களின் வாரிசுகள் வருமானம் அதிகமுள்ள வேறு வேலைகளை நாடிச் சென்றுவிட்டனர்.இதுவும் சிற்பத்தொழிலில்வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மேலும் வளர்ச்சி பெறாமல் தவிக்கும் திருமுருகன்பூண்டி சிற்பத்தொழிலை வளர்க்க தமிழக அரசு சார்பில் பயிற்சிக்

 கூடம் தொடங்கப்படுவதுடன், தேவையான நூல்களை தமிழில் மொழி பெயர்த்து அளிக்க வேண்டும். நலிந்த சிற்பத் தொழிலாளர்களுக்கென தனி நலவாரியம் அமைத்து தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும்.

 இத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மானிய விலையில் கிடைக்கவும், மின்சார சலுகை அளிக்கவும் வேண்டும் என்கிறார் அரசு அங்கீகாரம் பெற்ற சிற்பக்கலைஞர் டி.யூ.சம்பந்தம். கோடிக்கணக்கில் அன்னியச் செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர் பனியன் தொழிலுக்கு மட்டுமின்றி திருப்பூரின் மற்றொரு முகமாக உள்ள திருமுருகன்பூண்டி சிற்பத் தொழிலின் வளர்ச்சிக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும என்பது திருப்பூர்  மக்களின் வேண்டுகோள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com