கூட்டுறவுத் துறையில் ரூ. 20 லட்சம் முறைகேடு!

கோவை, ஜூலை 13: கோவையில் புரூக்பாண்ட் நிறுவனம் மூடிய பிறகும், அங்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் பண்டக சாலையை நடத்தி ரூ. 20 லட்சம் லாபம் ஈட்டி முறைகேடு செய்தது தொடர்பான விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளத
Updated on
2 min read

கோவை, ஜூலை 13: கோவையில் புரூக்பாண்ட் நிறுவனம் மூடிய பிறகும், அங்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் பண்டக சாலையை நடத்தி ரூ. 20 லட்சம் லாபம் ஈட்டி முறைகேடு செய்தது தொடர்பான விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

÷கோவையில் செயல்பட்டுவந்த புரூக்பாண்ட் நிறுவன வளாகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலைக்கு பொருள்களை விற்பனை செய்யும் பண்டக சாலை நிறுவப்பட்டது.

÷இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகு, கூட்டுறவுத் துறை சார்பில் நிறுவப்பட்ட பண்டக சாலையைக் கலைத்திருக்க வேண்டும்.

÷மாறாக, பண்டக சாலையைக் கலைக்காமல், தனிஅலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு நடந்து வந்தது. இந்த பண்டக சாலை மூலம் தீபாவளி பண்டிகைக் காலங்களில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டது.

÷2007 முதல் 2010 வரை மூன்று ஆண்டு காலமாக நடைபெற்ற பட்டாசு விற்பனையில் பல லட்சம் லாபம் ஈட்டப்பட்டதாகவும், அதேநேரத்தில் பண்டக சாலை பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்காக, லாபம் ஈட்டப்பட்ட தொகை செலவானது என்றும் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

÷இந்த விவகாரம் குறித்து அப்போதைய கோவை மேற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த தா.மலவரன், கூட்டுறவுத்துறை பதிவாளரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி இணை பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

÷இதுதொடர்பாக இணை பதிவாளர் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கான அறிக்கையும் வெளியானது. இப்போது இந்த விசாரணை அறிக்கை மீது மேல்நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

÷இதுதொடர்பாக அதிகாரிகள் சிலர் கூறியது:

 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட நிறுவனத்தில் உள்ள பண்டக சாலையைக் கலைக்காமல் எப்படி தொடர்ந்து நடத்தி வந்தனர் என்று தெரியவில்லை. இதில் இரு சக்கர சைக்கிளை பழுதுபார்க்கும் செலவு என ரூ. 30 ஆயிரம் கணக்கு காட்டியுள்ளனர்.

÷அதேபோல பட்டாசு விற்பனையில் கிடைத்த ரூ. 20 லட்சம் லாபக் கணக்கை, செலவு செய்துவிட்டதாக கணக்கு காண்பித்துள்ளனர். சுமார் 51 பணியாளர்களை வைத்து பட்டாசு விற்பனை செய்ததால், சம்பளம் உள்ளிட்டவற்றுக்கே லாபத்தில் கிடைத்த ரூ. 20 லட்சம் செலவாகிவிட்டதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

÷மேலும், கூட்டுறவுத் துறைக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத வகையில் செலவினங்களைக் காண்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று தெரிவித்தனர்.

÷பண்டக சாலை நடத்தியதில் லாபம் இல்லையெனில் அடுத்த ஆண்டே அதனைக் கலைத்திருக்கலாம். அதைவிடுத்து தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் என்ன? நஷ்டம் ஏற்பட்டது என்றால், பண்டக சாலையை மூட நடவடிக்கை எடுக்காதது ஏன்? ÷பண்டக சாலையில் பட்டாசு விற்றதில் கிடைத்த சுமார் ரூ. 20 லட்சம் பணம் எங்கே போனது? இதன் பின்னணியில் உள்ளோர் யார் என்பதைக் கண்டறிய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என்று கூறுகின்றனர் கூட்டுறவுத் துறை ஊழியர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com