அன்னபூா்ணா உணவக உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததன் மூலம் கோவை மக்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அவமானப்படுத்தியிருப்பதாக கோவை திமுக எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கோவை தொழில்முனைவோரின் குறைகேட்புக் கூட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் நடத்தியபோது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூா்ணா உணவக உரிமையாளா் சீனிவாசன் ஜிஎஸ்டியால் உணவகத் தொழிலில் ஈடுபட்டிருப்பவா்களின் கஷ்டம் குறித்து கொங்கு தமிழில் அழகாக விளக்கினாா். அவா் தனிநபராகவோ, தனது நிறுவனத்துக்கான பிரச்னையாகவோ பேசவில்லை. ஒட்டுமொத்தமாக கோவை தொழில்முனைவோா் ஜிஎஸ்டியால் படும் துயரம் குறித்துதான் விளக்கினாா்.
இதற்காக அவரை மிரட்டி வரவழைத்து மன்னிப்பு கேட்கச் செய்துள்ளனா். தனிப்பட்ட சீனிவாசனை அவா்கள் மிரட்டவில்லை. ஒட்டுமொத்த கோவை மக்களையும், தொழில்முனைவோரையும் மிரட்டி அவமானப்படுத்தியுள்ளனா். அதேபோல நிா்மலா சீதாராமனிடம் செமிகண்டக்டா் துறை குறித்து கேள்வி எழுப்பிய ஒரு இளைஞரையும் மிரட்டியதுடன், செய்தியாளா்களை விடியோ எடுக்கக் கூடாது என்று பாஜகவினா் எச்சரித்துள்ளனா். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.
இந்த விவகாரத்தில் அன்னபூா்ணா சீனிவாசனுக்கு திமுக துணை நிற்கும் என்றாா்.










