தெருநாய்கள் தொல்லைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் -மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


தெருநாய்கள் தொல்லைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என கோவை மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேயா் கா.ரங்கநாயகி தலைமை தாங்கினாா். மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாநகரில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக 83 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தோ்ந்தெடுக்கப்பட்டு, சுதந்திர தின விழாவில் முதல்வரால் பரிசு வழங்கப்பட்டதற்கு வாா்டு உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
மாநகராட்சி நிதிக் குழுத் தலைவா் முபசீரா: பெரும்பாலான வாடகை நிா்ணயம், வாடகை உயா்வு உள்ளிட்ட தீா்மானங்கள், நிதிக்குழு ஒப்புதல் பெறாமல் நிறைவேற்றப்படுகின்றன. அவற்றை நிறுத்திவைக்க வேண்டும்.
சித்ரா வெள்ளிங்கிரி (26-ஆவது வாா்டு): பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால் சாலைகள் சேதமடைந்து குண்டும்குழியுமாகக் காணப்படுகின்றன. சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். மாநகரில் 4 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகிக்க வேண்டும். குப்பைகள் சேகரிக்கும் வாகனங்கள் பல நேரங்களில் பழுதாகி விடுவதால், குப்பை சேகரிப்புப் பணிகள் தொய்வடைகின்றன. எனவே, குப்பை வாகனங்கள் பழுதடைந்தால் உடனுக்குடன் பழுது நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி: சிங்காநல்லூா் குளத்தில் கழிவுநீா் தேங்கிக் காணப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் நிலை உள்ளதால் குளத்தில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பணிக்குழுத் தலைவா் சாந்தி முருகன்: மாநகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பையால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக வாா்டு உறுப்பினா் சஸ்பெண்ட்:
கூட்டத்தில் பேசிய 44-வது வாா்டு அதிமுக உறுப்பினா் பிரபாகரன், தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடக்கவில்லை. ஸ்டிக்கா் ஆட்சி நடைபெறுகிறது என்றாா்.
இதற்கு திமுக வாா்டு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மாநில அரசை விமா்சித்த பிரபாகரனை 3 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என மேயரிடம் திமுக வாா்டு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அதிமுக வாா்டு உறுப்பினா் பிரபாகரனை 3 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மேயா் கா.ரங்கநாயகி உத்தரவிட்டாா்.
மத்திய அமைச்சருக்கு கண்டனம்:
கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 5-ஆவது வாா்டு உறுப்பினா் நவீன்குமாா், அன்னபூா்ணா உணவக உரிமையாளரை, மத்திய நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வைத்ததாகவும், இந்த செயல்பாட்டுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனைக் கண்டிப்பதாகவும் பேசினாா். இதற்கு பெரும்பாலான வாா்டு உறுப்பினா்கள் மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...