தமிழகத்தில் நிகழும் தற்கொலைகளுக்கு 10 மருந்துகள் காரணமாக இருப்பதாகவும், மருந்துகளின் சட்ட விரோத பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கையாளுவது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், ஆலோசகர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது. சமூகப் பணித் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கே.எம்.சின்னதுரை தலைமை தாங்கினார். சமூகப் பணித் துறைத் தலைவர் எம்.புனிதா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா பேசியதாவது:
மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்தும் கலாசாரம் குழந்தைகள், மாணவர்களிடம் பரவி வருகிறது. இதன் மூலம் மோசமான ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. தமிழகத்தில் நிகழும் தற்கொலைகளுக்கு மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் 10 மருந்துகளே காரணம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற பயிற்சி முகாம்கள் மூலம், மருந்துகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முறையான கல்வி அறிவு குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்றார். வெள்ளிக்கிழமை (நவ. 17) வரை நடைபெறும் இந்த பயிலரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு, மருந்து பயன்பாடு, குழந்தைகள் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தாளர்கள் உரையாற்ற உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.