கோவையில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் ஸ்ரீ கோகுல ஜெயம் சிட்ஃபண்ட்ஸ் நிதி நிறுவன அதிபரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கோவை, சாய்பாபா காலனி, என்எஸ்ஆர் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் எதிர்ப்புறம் ஸ்ரீ கோகுல ஜெயம் சிட்ஃபண்ட்ஸ் (பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் பல்வேறு கிளைகளைத் தொடங்கி சீட்டு நடத்தி, பொதுமக்களிடமிருந்து பணத்தைப் பெற்று திரும்பத் தராமல் ஏமாற்றியுள்ளது.
எனவே இந்த நிறுவனத்தின் மீது கோவை பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுவரையில் 27 நபர்களிடமிருந்து ரூ. 59 லட்சம் வரையில் ஏமாற்றியதாக புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து, நிறுவனத்தை நடத்தி வந்த நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.அரவிந்த் (27) என்பவரை பொருளாதர குற்றப் பிரிவு போலீஸார் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். இவரிடமிருந்து கார் உள்ளிட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, ஸ்ரீ கோகுல ஜெயம் சிட்ஃபண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








