பொள்ளாச்சி அருகே வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த வஞ்சியாபுரம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வினித் (18). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் ஜெய்கணேஷ் (21), சரவணன் (17) ஆகியோருடன் பொள்ளாச்சியில் இருந்து ஆழியாறு சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வினித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஜெய்கணேஷ், சரவணன் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தனர். பொள்ளாச்சி கிழக்கு போலீஸார், காரை ஓட்டிவந்த வழக்குரைஞர் சண்முகத்திடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
நெகமத்தை அடுத்த என்.சந்திராபுரத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த போனோ குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், போனோவின் குழந்தை மோனி (4) தென்னை நார் தொழிற்சாலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது தென்னைநார் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை ஓட்டுநர் ராம்குமார் (22) இயக்கியுள்ளார்.
டிராக்டரை பின்புறமாக இயக்கும்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மோனி மீது டிராக்டர் ஏறியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (22). இவர், கணபதிபாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தார். பொள்ளாச்சி வனத் துறை அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









