“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இந்து பிரமுகர்களைக் கொல்ல சதி: 5 இளைஞர்கள் கைது

கோவையில் இந்து பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 5 இளைஞர்களை வெரைட்டிஹால் ரோடு போலீஸார் சட்ட விரோத தடுப்புச் சட்டத்தில் (உபா) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

Updated On :3 செப்டம்பர் 2018, 2:05 am

கோவையில் இந்து பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 5 இளைஞர்களை வெரைட்டிஹால் ரோடு போலீஸார் சட்ட விரோத தடுப்புச் சட்டத்தில் (உபா) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
தன்பாத்தில் இருந்து ஆலப்புழை செல்லும் விரைவு ரயிலில் வரும் 4 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க உதவுமாறு மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள்(ஐபி),  கோவை மாநகர காவல் துறையினருக்குத் தெரிவித்திருந்தனர்.  மேலும், அவர்களின் அடையாளங்களையும் தெரிவித்திருந்தனர். இதன்படி கோவை மாநகர போலீஸார் வடகோவை,  கோவை ரயில் நிலையங்களில் துப்பாக்கிகளுடன் மாறுவேடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சனிக்கிழமை பிற்பகல்12 மணி அளவில் கோவை வந்தடைந்த ரயிலில் இருந்த சம்பந்தப்பட்ட 4 பேரையும் போலீஸார் சுற்றி வளைத்தனர். மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸாரும் அவர்களைப் பின்தொடர்ந்து அதே ரயிலில் வந்தனர். 
இதையடுத்து, அவர்களை விசாரணைக்காக பீளமேடு குற்றப் பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவர்களை அழைத்துச் செல்வதற்காக வந்த கோவை என்.எச்.சாலையைச் சேர்ந்த ஆஷிக்(25) என்பவரையும் போலீஸார் அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து,  பீளமேடு காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு முழுவதும் 5 பேரிடம் மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் மாநகர போலீஸார் விசாரணை நடத்தினர்.  
விசாரணையில் அவர்கள்,  சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), பல்லாவரத்தைச் சேர்ந்த சம்சுதீன் (20), ஓட்டேரியைச் சேர்ந்த சலாவுதீன் (25), திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகியோர் என்பதும்,  அவர்கள், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகம்மது ஆஜம் திருமணத்துக்கு வந்துள்ளதும் தெரியவந்தது. 
அதேவேளையில்,  இந்து பிரமுகர்கள் சிலரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து,  5 பேர் மீதும் உபா,  கூட்டுச்சதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளில்  வெரைட்டிஹால் ரோடு போலீஸார் வழக்குப் பதிவு கைது செய்தனர். 
பின்னர் அவர்களை மாஜிஸ்திரேட் சுப்புலட்சுமி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதைத் தொடர்ந்து, இந்து  பிரமுகர்களின் பாதுகாப்பையும் மாநகர போலீஸார்அதிகரித்துள்ளனர். 
செல்லிடப்பேசி உரையாடலால் சிக்கினர்: இந்து இயக்கங்களில் உள்ள முக்கியப் பிரமுகர்களை ஒரு கும்பல் குறிவைத்துள்ளதாக மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இது சம்பந்தமாக செல்லிடப்பேசி உரையாடலில்  அவர்கள் ஆவேசமாகப் பேசிவந்தது தெரியவந்தது. இதனடிப்படையில் இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.