கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணி நிலவரப்படி விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனவே கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி அறிவித்துள்ளார்.