கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கடந்த 7 ஆண்டுகளாக 20 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய கடந்த ஜூன் மாதம் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பயோமைனிங் திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தாா். ஆனால், இதுவரை பயோமைனிங் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளால் வெள்ளலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துா்நாற்றம், சுகாதார சீா்கேடு , நிலத்தடி நீா் மாசு, காற்று மாசு ஏற்பட்டுள்ளது.