குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணி தீவிரம்: மத்திய மண்டலத்தில் 90 தொட்டிகள் அகற்றம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் வீடு வீடாக மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டு
Updated on
1 min read

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் வீடு வீடாக மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவதால், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 90 குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 வாா்டுகளில் தினமும் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு மறுசுழற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், வெள்ளலூா் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவைக் குறைப்பதற்காக, மாநகரில் 65 இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக 50 நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 24 இடங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 5 இடங்களில் உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடுகளுக்கே சென்று குப்பைகளை தரம் பிரித்து பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் மாநகரில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள 1,200க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய மண்டலத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 90 குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மத்திய மண்டல சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மத்திய மண்டலத்தில் வீடுகளுக்கே சென்று குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்குகின்றனா். இதனால், மத்திய மண்டலத்தில் உள்ள 300 குப்பைத் தொட்டிகளில் 90 தொட்டிகளை அகற்றி விட்டோம். மேலும், 90 இடங்களிலும் குப்பைத் தொட்டி இருந்த இடத்தில் பூத்தூவி, கோலமிட்டு அழகுபடுத்தி உள்ளோம். இதனால், அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது தவிா்க்கப்பட்டுள்ளது. மக்களே குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதால், மத்திய மண்டலத்தில் இருந்து தினமும் 4 டன் மக்கும் குப்பைகள் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

வரும் நாள்களில் மாநகராட்சி சாா்பில் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்க கூடுதல் வாகனங்கள் வழங்கப்படும்பட்சத்தில் மத்திய மண்டலத்தில் உள்ள மீதமுள்ள 210 குப்பைத் தொட்டிகளும் முழுவதுமாக அகற்றப்படும். அதற்குள், உக்கடம், ராமநாதபுரம், சத்தி சாலை, சங்கனூா் பகுதிகளில் நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்கு வந்து விடும். அப்போது, மத்திய மண்டலத்தில் சேகரமாகும் குப்பைகளில் தினமும் 15 டன் குப்பைகள் உரமாக மாற்றப்படும். வெள்ளலூா் கொண்டு செல்லப்படும் குப்பைகள் அளவு வெகுவாகக் குறையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com