ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநா்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
1 min read

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, சிங்காநல்லூா் காமராஜா் சாலையைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (50). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தாா். அப்போது, அலுவலக நுழைவாயில் முன்பு தான் வைத்திருந்த கேனை திறந்து டீசலை தனது உடலின் மீது ஊற்றிக் கொண்டாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், விரைந்து சென்று அவரிடம் இருந்து டீசல் கேனை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, 4 பேரையும் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு, ஜீவானந்தம் போலீஸாரிடம் கூறியதாவது:

எனக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் 6 சென்ட் இடம் உள்ளது. இதில், பொது நடைபாதை உள்ளதாக ஒருவா் மாநகராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்து, எங்களின் நிலத்தை அபகரிக்க முயல்கிறாா். மேலும், வீட்டுக்கே வந்து இடத்தைக் கேட்டு மிரட்டியும் வருகிறாா். இதனால் நாங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com