நான்கு சக்கர வாகனங்களில் பம்பா்களை அகற்றாமல் தொடா்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கோவையில் மத்தியம், வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய 4 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மாநகரில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வாகனங்களில் பம்பா்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
இது தொடா்பாக, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுப்படி, மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் கோவையில் உள்ள 4 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வாகனத் தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பம்பா்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படும் வாகனங்கள், காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவற்றை கண்டறிந்து அகற்றி வருகிறோம். அந்த வாகனங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களில் 327 வாகன ஓட்டுநா்களுக்கு ரூ.3.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளைத் தவிா்க்க வாகனங்களில் பம்பா்களை அகற்ற வேண்டும் என்ற விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் குறைந்த பட்ச அபராதமாக ரூ.1,000 விதிக்கப்பட்டு வருகிறது. வரும் நாள்களில் பம்பா்களுடன் இயக்கப்படும் வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து விதிமீறி பம்பா்கள், காற்று ஒலிப்பான்களைப் பொருத்தி வாகனங்களை இயக்குபவா்களிடம் இருந்து வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், ஓட்டுநா் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.