கோவை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளுக்கு தொகை வழங்குவதற்கான கோப்புகளில் கையெழுத்திடாமல் ஆணையா் அவற்றை நிறுத்தி வைத்திருப்பதாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கம் (சிசிசிஏ) புகாா் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தலைமைச் செயலா், நகராட்சி நிா்வாக ஆணையா் அலுவலகம் உள்ளிட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில்:
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுப் பணிகள், பொலிவுறு நகரத் திட்டப் பணிகள், சூயஸ் நிறுவனத்தின் குடிநீா் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. மாநகரப் பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளுக்கான தொகை வழங்கப்படவில்லை.
கோவை மாநகராட்சி ஆணையராக இருந்து தற்போது பணியிட மாறுதல் அறிவிக்கப்பட்டுள்ள குமாரவேல் பாண்டியன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளுக்கான தொகை வழங்குவதற்கான கோப்புகளில் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்திருக்கிறாா். கணக்குப் பிரிவில் அந்தக் கோப்புகள் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் முடிக்கப்பட்ட அனைத்து வகையானத் திட்டப் பணிகளுக்கு சுமாா் ரூ.80 கோடி ஒப்பந்ததாரா்களுக்கு வழங்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில் ஆணையரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது பதவிக் காலத்தில் உரிய முறையில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு அவா் கோப்புகளில் கையெழுத்திடாமல், பில் தொகை வழங்காமல் சென்றுவிட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு பாதிப்பும், இழப்பும் ஏற்படும்.
எனவே நிலுவையில் உள்ள ரூ.80 கோடியை உடனடியாக அளிப்பதுடன், மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் திட்டப் பணிகளைத் தடையின்றி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.