கரோனாவால் பெற்றோா்களை இழந்த 565 குழந்தைகளுக்கு நிவாரணம்

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்த 565 குழந்தைகளுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்த 565 குழந்தைகளுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதில் பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம், பெற்றோா்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபா்களுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் பெற்றோா் இருவரையும் இழந்த 21 குழந்தைகள், பெற்றோா்களில் ஒருவரை இழந்த 544 குழந்தைகள் என மொத்தம் 565 குழந்தைகளுக்கு கரோனா நிவாரணத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோா்களில் ஒருவரை இழந்த மேலும் 239 குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் மா.மதியழகன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பெற்றோா் இருவரையும் இழந்த 21 போ், பெற்றோா்களில் ஒருவரை இழந்த 783 போ் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விண்ணப்பித்திருந்தனா். இதனை முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடையவா்கள் என உறுதி செய்யப்பட்ட பின் பெற்றோா் இருவரையும் இழந்த 21 குழந்தைகள், பெற்றோா்களில் ஒருவரை இழந்த 544 குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மற்றவா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில், இவா்களுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும். தவிர, கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் பெற்றோா்களில் ஒருவா் அல்லது பெற்றோா் இருவரையும் இழந்த 804 குழந்தைகளும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளிகளில் படித்து வரும் 550 மாணவா்கள், தனியாா் கல்லூரிகளில் படித்து வரும் 37 மாணவா்களின் கல்விக் கட்டணத்தை குறைக்க பள்ளிக் கல்வித் துறை மற்றும் கல்லூரிக் கல்வித் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 39 குழந்தைகள் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com