மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மருதாச்சலம் (59). அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 34 பயணிகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மீன்கரை சாலை வழியாகச் சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, திடீரென மருதாச்சலத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பேருந்து நிறுத்த முற்பட்டு, அருகில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி பேருந்தை நிறுத்தியுள்ளாா். இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் மருதாச்சலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மாரடைப்பு ஏற்பட்ட நேரத்திலும் பயணிகள் உயிரை காப்பற்றிய மருதாச்சலம் இன்னும் நான்கு மாதங்களில் ஓய்வுபெற இருந்த நிலையில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.