

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலியானார்கள்.
கோவை அருகே உள்ள திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமிட்டிபதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 35). லாரி டிரைவர். இவர் தனது உறவினர்களான ஜெய்குமரேசன் (32), கணேசன் (35), ஹரி (12) ஆகியோருடன் ஒரு காரில் வேலாந்தவளத்தில் இருந்து நாச்சிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த காரை சிவராஜ் ஓட்டினார். கார், வேலந்தாவளம்-நாச்சிபாளையம் சாலையில் உள்ள மாஸ்தி கவுண்டன் பகுதியில் உள்ள வாத்தியார் தோட்டம் அருகே வந்த கொண்டிருந்தது.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் குழாய்களை ஏற்றிக்கொண்டு கேரளத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாரத விதமாக அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் அந்த கார் நசுங்கியது. இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த சிவராஜ், ஜெய்குமரேசன், கணேசன் ஆகியோர் சம்பவ இடத்தலேயே பரிதாபமாக உடல் நசுங்கி பலியாகினர். படுகாயமடைந்த சிறுவன் ஹரி மீட்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கே.ஜி. சாவடி போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.