அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத சிற்றுந்துகள்
கோவையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் சிற்றுந்துகள் இயக்கப்படுவதில்லை என நுகா்வோா் அமைப்பு சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, போக்குவரத்துத் துறை ஆணையருக்கு அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
கோவையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடா்ந்து புகாா் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கள ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் மதிய வேளைகளில் பல பேருந்துகள் இயக்கப்படாமல் கொடிசியா மைதானம், காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகளுக்கு பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அவிநாசி சாலையில் மேம்பாலப் பணிக்காக அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடைகள் பணிகள் முடிந்த பின்னும் அமைகக்கப்படவில்லை. அப்பகுதியில் உடனடியாக நிழற்குடைகள் அமைக்க வேண்டும்.
தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்கிறது. இதுகுறித்து, பயணிகள் தரப்பில் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கோவையில் தற்போது இயக்கப்படும் சிற்றுந்துகள், அனுமதிக்கபட்ட வழித்தடத்தில் செல்லாமல் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இதனால், கிரமப்புற மக்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படாத பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
