போத்தனூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரயில்
சபரிமலையில் மகர விளக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரம் - சென்னை இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து ஜனவரி 15-ஆம் தேதி காலை 4.25 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06058) அன்று இரவு 11 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் சென்னையில் இருந்து ஜனவரி 16-ஆம் தேதி இரவு 1 மணிக்குப் புறப்படும் சென்னை - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06059) அன்று இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.