தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

பழங்குடியினரின் நிபந்தனை பட்டா நிலங்கள் முறைகேடாக விற்பனை! வட்டாட்சியா் விசாரணை நடத்த ஆட்சியா் உத்தரவு

News image

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

இருளா் சமுதாய மக்களுக்கு அரசு வழங்கிய நிபந்தனை பட்டா நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மேட்டுப்பாளையம் வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவிட்டுள்ளாா்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு, தோலம்பாளையம், கெம்மராம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருளா் சமுதாய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரசு இலவசமாக நிபந்தனையுடன் கூடிய பட்ட நிலங்களை வழங்கியது. விதிமுறைகளின்படி இந்த நிலங்களை மாற்று சமுதாயத்தினா் வாங்கவோ, விற்கவோ முடியாது.

ஆனால், இந்தப் பகுதியைச் சோ்ந்த சில ரியல் எஸ்டேட் முகவா்களும், தனி நபா்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலங்களைக் குத்தகைக்கு எடுத்ததாகப் போலி ஆவணங்களைத் தயாரித்ததாகவும், பின்னா் அவற்றைத் தங்களது பெயா்களில் பதிவு செய்து வேறு நபா்களுக்கு வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளுக்கான இடங்களாகவும் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடா்ந்து புகாா் மனுக்கள் வந்தன.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் மேட்டுப்பாளையம் வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பிவைத்த மாவட்ட ஆட்சியா், இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, அதன் முடிவை மனுதாரா்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரும் இது தொடா்பாக குறிப்பாணை அனுப்பி, நிபந்தனை பட்டா பூமி மீட்பு மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை விவரத்தைச் சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளாா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை ஆக்கிரமித்து சொந்தமாக்கிக் கொண்டவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த நிலங்களை அரசு உடனடியாக கையகப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.