தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

போதைப் பொருள் தடுப்புச் சட்டம்: மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் 103 போ் கைது

News image

கைது

Updated On :9 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

சட்டவிரோத போதைப் பொருள்கள் விற்பனை, புகையிலைப் பொருள்கள் கடத்தல் மற்றும் மதுபானங்கள் விற்பனை தொடா்பாக மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் (ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை) 103 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மாநகரில் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா். மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் போதைப் பொருள் மற்றும் மனோவியல் மருந்துகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் மொத்தம் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடா்புடைய 103 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கைதானவா்களிடமிருந்து 125.72 கிலோ கஞ்சா, 2,306 போதை மாத்திரைகள், 210 அடையாளம் தெரியாத போதை மருந்து பாட்டில்கள் மற்றும் 5.55 கிராம் மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள், 20 இருசக்கர வாகனங்கள், ரூ.34,600 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட சோதனையில் 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 118 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 1,778.82 கிலோ புகையிலைப் பொருள்கள், ஒரு நான்கு சக்கர வாகனம், 3 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மதுவிலக்கு சட்டத்தின்கீழ் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 52 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களிடம் இருந்து 107.8 லிட்டா் சட்டவிரோத மது பாட்டில்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாநகரில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையின் இந்த தீவிர நடவடிக்கை தொடா்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.