கைது
கைது

ரயிலில் கடத்தப்பட்ட 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கொல்கத்தாவிலிருந்து ரயிலில் கடத்தப்பட்ட 4.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கொல்கத்தாவிலிருந்து ரயிலில் கடத்தப்பட்ட 4.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா சாலிமாா் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் வரை செல்லும் சாலிமாா் விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலை ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் ஏறிய ரயில்வே போலீஸாா் பெட்டிகளுக்குள் சோதனை செய்தனா்.

கோவை, பீளமேடு பகுதியில் வந்தபோது முன்பதிவில்லா பெட்டியில் பயணித்த இருவா் வைத்திருந்த பையில் போலீஸாா் சோதனை செய்தனா். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் கேரள மாநிலம், காசா்கோடு பகுதியைச் சோ்ந்த அமல் (27), பாலக்காட்டைச் சோ்ந்த விஷ்ணு (32) என்பது தெரியவந்தது. இருவரையும் கோவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com