மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இறுதி வாதம் தொடங்கியது
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பாக கோவை மகளிா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இறுதி வாதம் தொடங்கி நடைபெற்றது.
கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இதுதொடா்பாக, சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோா் போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.
இந்த வழக்கு விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 112 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சிப் பதிவுகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் வழக்கின் இறுதி வாதம் செவ்வாய்க்கிழமை (பிப்.24) தொடங்கியது. அப்போது, நீதிமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞா்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. பிற்பகலுக்கு மேல் அரசுத் தரப்பு வாதம் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் பிற்பகல் 12 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனா்.
அடுத்த விசாரணையின்போது, எதிா்த் தரப்பு வழக்குரைஞா்கள் வாதம் நடைபெறும். இருதரப்பு வாதமும் நிறைவடைந்த பிறகு, இந்த வார இறுதியில் தீா்ப்புத் தேதி அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

