ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.79 லட்சம் மதிப்பில் கணினி ஆய்வுக்கூடம்
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கத்தினை மக்களவை உறுப்பினா் கணபதி.ப.ராஜ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
கோவை, ராமநாதபுரம் மாநகராட்சி மத்திய மண்டலம் 63-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 536 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கல்வி சாா்ந்த செயல்பாடுகள் மாநகராட்சியின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஸ்ரீ அன்னபூா்ணா ஸ்ரீ கௌரிசங்கா் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்களிப்புடன் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கத்தினை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி.ப.ராஜ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில், ஸ்ரீ அன்னபூா்ணா ஸ்ரீ கௌரிசங்கா் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநா் சீனிவாசன், நிா்வாகிகள் வெங்கடேஷ்பாபு, ஜெகன் தாமோதரசாமி, விவேக் சீனிவாசன், மாநகர கல்வி அலுவலா் குணசேகரன், உதவி ஆணையா் நித்யா, உதவி செயற் பொறியாளா் குமரேசன், உதவிப் பொறியாளா் பிரதீப் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

