பேரூா் தமிழ்க் கல்லூரியில் மத நல்லிணக்கப் பொங்கல் விழா
கோவை பேரூா் தமிழ்க் கல்லூரியில் மத நல்லிணக்கப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழா் பாரம்பரிய பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள தமிழா்களால் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் பல்வேறு விதமான வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பேரூா் தமிழ்க் கல்லூரி வளாகத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், சமத்துவப் பொங்கல் விழாவாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சாா்பாக 16-ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவா் முகமது ரபி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்வில் ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள் உள்பட பல்வேறு மதத்தினரும் இணைந்து பொங்கல் வைத்தனா்.
ஆடல், பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னா், கண்களைக் கட்டிக்கொண்டு பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது.
இதுகுறித்து பல்சமயம் நல்லுறவு இயக்கத்தின் தலைவா் முகமது ரபி கூறும்போது, ‘சாதி மத பேதமில்லாமல் நாட்டில் உள்ள பொதுமக்கள் மத நல்லிணக்க விழாக்களை கொண்டாட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை, பன்முக கலாச்சாரம் கொண்ட இந்த நாட்டில் மத நல்லிணக்கமே மனிதம் மலர உதவும்’ என்றாா்.

