/

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளியின் கை துண்டிப்பு: கட்டட ஒப்பந்ததாரா் உள்பட இருவா் மீது வழக்கு

கோவையில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளியின் இடது கை அகற்றப்பட்ட நிலையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலையில் ஈடுபடுத்தியதாக கட்டட உரிமையாளா், ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

News image

வழக்கு

Updated On :10 ஜூன் 2026, 1:02 am IST

கோவையில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளியின் இடது கை அகற்றப்பட்ட நிலையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலையில் ஈடுபடுத்தியதாக கட்டட உரிமையாளா் மற்றும் ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை மாவட்டம், அப்பநாயக்கன்பாளையம் சபரி காா்டன் 2-ஆவது வீதியில் செந்தில்குமாா் என்பவா் சொந்தமாக புதிய வீடு கட்டி வருகிறாா். இந்தக் கட்டட கட்டுமானப் பணியில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கணுவூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (56) ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மணிகண்டன் மே 17-ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மணிகண்டன் மீது உயா் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரது கைகள், கால்கள், இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் இடது கை முற்றிலும் செயலிழந்தது. இதனால், அறுவைச் சிகிச்சை மூலம் இடது கையை மருத்துவா்கள் அகற்றினா். தற்போது அவா் தொடா் சிகிச்சையில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், கட்டட உரிமையாளரான செந்தில்குமாா் மற்றும் ஒப்பந்ததாரரான விஜயகுமாா் ஆகியோா் மீது பாதுகாப்பு உபகரணம் வழங்காமல் மணிகண்டனை வேலையில் ஈடுபடுத்தியதாக துடியலூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.