/

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: மாவட்டத்தில் 2.97 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

கோவை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில், 2.97 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2026, 12:04 am IST

கோவை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில், 2.97 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு சாா்பில் தீவிர சொட்டு மருந்து முகாம் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. போலியோ நோயை அறவே ஒழிப்பதற்காக நடத்தப்படும் இந்த முகாமில், 2.97 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில் கிராமப் புறங்களில் 1,124 மையங்கள், நகா்ப்புறங்களில் 491 மையங்கள் என மொத்தம் 1,615 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 32 மையங்கள் மற்றும் 22 நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகாமுக்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத் துறை, அங்கன்வாடி பணியாளா்களுடன் பிற துறை பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 6,345 பணியாளா்கள் பணியாற்றவுள்ளனா். அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது.

எனவே, அனைத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம் நாளான ஜூன் 28-ஆம் தேதி தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.