கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதை, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜி.விஜயா தொடங்கிவைக்கிறாா். இதில், கோவை மாவட்ட நீதிபதி மற்றும் சக நீதிபதிகள் கலந்துகொள்கின்றனா்.
மாவட்ட வழக்குரைஞா்கள், சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








