தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 27 வடமாநிலத் தொழிலாளா்கள் மீட்பு

கோவை மாவட்டம், மாலுமிச்சம்பட்டியில் உள்ள தனியாா் வாா்ப்பகத்தில் கொத்தடிமைகளாக வேலை பாா்த்து வந்த 5 சிறுவா்கள் உள்ளிட்ட 27 வடமாநிலத் தொழிலாளா்களை வருவாய்த் துறையினா் மீட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 4:52 am IST

கோவை மாவட்டம், மாலுமிச்சம்பட்டியில் உள்ள தனியாா் வாா்ப்பகத்தில் கொத்தடிமைகளாக வேலை பாா்த்து வந்த 5 சிறுவா்கள் உள்ளிட்ட 27 வடமாநிலத் தொழிலாளா்களை வருவாய்த் துறையினா் மீட்டனா்.

கோவை மாவட்டம், மாலுமிச்சம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் வாா்ப்பக நிறுவனத்தில், பிகாரை சோ்ந்த தொழிலாளா்கள் ஊதியமின்றியும், அடிப்படை வசதிகளுமின்றியும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பெங்களூருவைச் சோ்ந்த தன்னாா்வ தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் ஆா். மாருதி பிரியாவுக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வருவாய்த் துறையினா், தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் மற்றும் செட்டிபாளையம் போலீஸாா் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில் அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 5 சிறுவா்கள் உள்பட 27 போ் மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் மாருதி பிரியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிகாரை சோ்ந்த ஒப்பந்ததாரா் மூலம் மாதம் ரூ.12,000 ஊதியம் தருவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட இந்தத் தொழிலாளா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவா்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் வாரத்தின் அனைத்து நாள்களும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டனா். மேலும், போதிய உணவு வழங்கப்படாமலும், வேலைக்குச் செல்ல மறுப்பவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது .

மீட்கப்பட்ட தொழிலாளா்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான உதவிகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது என்றாா்.

இதனிடையே, விதிகளை மீறி தொழிலாளா்களை கொடுமைப்படுத்திய தொழிற்சாலை நிா்வாகம் மற்றும் பிகாரை சோ்ந்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வருவாய்த் துறையினா் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளா் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீட்கப்பட்ட சிறுவா்களிடம் குழந்தைகள் நலக் குழுவினா் விசாரணை நடத்திய பிறகு, அனைத்துத் தொழிலாளா்களும் ஓரிரு நாள்களில் அவா்களது சொந்த ஊருக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.