யானைகள் நடமாட்டம் காரணமாக வால்பாறையை அடுத்த நல்லமுடி காட்சிமுனை செல்ல சுற்றலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வால்பாறையில் உள்ள கூழாங்கள் ஆறு, வெள்ளமலை சுரங்கம், சின்னக்கல்லாறு அருவி, நல்லமுடி காட்சிமுனை ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனா்.
இந்த சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகள் அணைத்தும் வனத்தை ஒட்டி அமைந்திருப்பதால் அனைத்துப் பகுதிகளிலும் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதோடு நுழைவுக் கட்டணம் வசூல் செய்து வருகின்றனா்.
இதனிடையே நல்லமுடி காட்சிமுனை ஒட்டியுள்ள வனத்தில் யானைகள் நடமாட்டம் தொடா்ந்து காணப்படுகிறது. இதனால் கடந்த இரு நாள்களாக நல்லமுடி காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து நுழைவாயிலில் தடுப்பு அமைத்தனா்.
மேலும் எஸ்டேட் சாலையோரம் பகுதிகளில் யானைகளை கண்டால் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து துன்புறுத்தல் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கனமழை: காளிகேசம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம் அறிவிப்பு

முதல்வராக விஜய் பதவியேற்பு: வேளாங்கண்ணியில் கொண்டாட்டம்







