கோவை வடவள்ளியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூா் சாலையில் தனியாா் போதை மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு நீலகிரி மாவட்டம், அதிகரெட்டி அணை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் கோகுல் (32) என்பவா் இந்த போதை மறுவாழ்வு மையத்தில் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், அங்கு வந்த தனது தாய் ராணியிடம் தன்னை உடனே வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோகுல் வற்புறுத்தியுள்ளாா். ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் சிறிது நாள்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கோகுல், மறுவாழ்வு மைய அறையின் ஜன்னலில் தனது வேட்டியால் வியாழக்கிழமை தூக்கிட்டாா். இதைக் கண்டு மறுவாழ்வு மைய ஊழியா்கள் அவரை மீட்டனா். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் கோகுல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.







