நெற் பயிர்க் காப்பீட்டில் ஈரோடு மாவட்டம் முதலிடம்:  அமைச்சர்செங்கோட்டையன்

நெற் பயிர்க் காப்பீட்டில் தமிழகத்தில்  ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Updated on
2 min read

நெற் பயிர்க் காப்பீட்டில் தமிழகத்தில்  ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  அனைத்துத் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 2017-2018ஆம் ஆண்டில் நெல் 34,533 ஹெக்டேர் பரப்பளவில் 21,148  மெட்ரிக் டன் அளவும், சிறுதானிய வகைகள் 50,371 ஹெக்டேர் பரப்பளவில் 94,993 மெட்ரிக் டன் அளவும்,  பயறு வகைகள் 5,132 ஹெக்டேர் பரப்பளவில் 29,031 மெட்ரிக் டன் அளவும்,  எண்ணை வித்துக்கள் 27,007 ஹெக்டேர் பரப்பளவில் 24,607 மெட்ரிக் டன் அளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீடுத் திட்டம் இம்மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.   நெற் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. நுண்ணுயிர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் 4,090 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, விவசாயிகளைத் தேர்வு செய்து,   இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் கீழ் 20 நபர்கள் கொண்ட 175 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 100 உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு ஒரு நிறுவனம் அமைத்து, அந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகள் விளைவித்த பொருள்களை வாங்குவதற்கும்,  விற்பனை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விதை வகைகளான நெல் 47 மெட்ரிக் டன் அளவிலும், சிறுதானிய வகைகள் 20 மெட்ரிக் டன் அளவிலும், பயறு வகைகள் 16 மெட்ரிக் டன் அளவிலும், காய்கறி விதைகள் 8 மெட்ரிக் டன் அளவிலும் இறுப்பு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஊரக வணிக மையம் ஏற்படுதப்பட்டு, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வியாபாரிகளிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மஞ்சள் விற்பனைக்கென மின்னணு ஏல முறை செயல்படுத்தப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து சுமார் ரூ.33 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.  விவசாயிகள் தங்கள் விளைபொருளான மஞ்சளை விற்பனை செய்ய வரும் போது,  முன்பதிவு செய்து அவர்களது செல்லிடப்பேசி வாயிலாக குறுந்தகவல் பெற்று அதன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.  மேலும் மஞ்சளின் தரம் அறிய ஆய்வகம் நிறுவ அரசுக்குத் திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அளுக்குளி, அந்தியூர், அவல்பூந்துறை, புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி, சத்தியமங்கலம் ஆகிய 6 இடங்களில் வேளாண் குளிர்பதனக் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன.  இக்கிடங்குகள் மூலம் பச்சைப் பயறு,   தட்டைப் பயறு,  மஞ்சள்,  ஆப்பிள்,  ஆரஞ்ச்,  புளி, வரமிளகாய்,  பூக்கள் போன்ற பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மழை அதிகம் பெய்யும் இடங்களைத்  தேர்வு செய்து, விவசாயிகளின் பங்களிப்போடு தடுப்பணைகள் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தட்கல் முறையில் மின்சார வாரியத்தில் ஈரோடு மற்றும் கோபி ஆகிய 2 கோட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் 75 சதவீதம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள இணைப்புகள் விரைவில் கொடுக்கப்படவுள்ளது.  மேலும் மின் கம்பங்கள் இருப்பு எடுக்கப்பட்டு, மறு பயன்பாட்டுக்கு உள்ள மின்கம்பங்களை பயன்படுத்தலாம்.
ஈரோடு மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொதுப் பணித் துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை விரைந்து முடிக்கவும், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர்,  மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம்,  எம்.பி.க்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு),  வி.சத்தியபாமா (திருப்பூர்),  எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு (ஈரோடு  கிழக்கு), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com