பர்கூர் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அந்தியூர் வனப் பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதுடன் உபரி நீர், அணையின் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்கள் மூலமாக வெளியேறி வருகிறது.
பர்கூர் மலை அடிவாரத்தில் உள்ள இந்த அணையின் முழுக் கொள்ளளவு 33 அடியாகும். கடும் வறட்சி காரணமாக அணையின் நீர்மட்டம் கடந்த இரு ஆண்டுகளாக மிகவும் குறைந்திருந்தது. கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இந்நிலையில், பர்கூர் மற்றும் அந்தியூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வரட்டுப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பர்கூர், தாமரைக்கரை, போளி மற்றும் வடகரை பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து, முழு கொள்ளளவான 33 அடியை எட்டியது.
இதையடுத்து, அணையின் மேற்கு, கிழக்கு கால்வாய்கள் வழியாக உபரிநீர் விநாடிக்கு 200 கன அடி வீதம் வெளியேறியது. அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வாய்க்கால் வழியாக கெட்டிச் சமுத்திரம் ஏரியைச் சென்றடையும்.
கடந்த இரு ஆண்டுகளுக்குப் பின்னர் அணை நிரம்பியதால் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயப் பணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.