தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் பால் கொள்முதல் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மொடக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டத்துக்கு, திருச்சி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். சக்தி சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். சங்கச் செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடனை உடனடியாக எந்த பாரபட்சமுமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை குறுகிய கால பயிர்களுக்கும், செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நீண்டகால பயிர்களுக்கும் காப்பீடு செய்துள்ள விவசாயிகள் விதைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு அதற்குண்டான காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் வறட்சி நிவாரணம் ரூ. 320 கோடி பல விவசாயிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக விதை, உரம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் மனிதர்களுக்கு உள்ளதுபோல், கால்நடைகளுக்குத் தனியாக மாவட்டம்தோறும் இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
பால் கொள்முதல் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும். நடப்பு பருவத்துக்கு உண்டான கரும்பு கொள்முதல் விலையை அரசு முத்தரப்புக் கூட்டம் நடத்தி டன் ஒன்றுக்கு ரூ. 3,500 என அறிவிக்க வேண்டும். கரும்பு ஆலைகள் விதை கரணைகளை இலவசமாக வழங்க வேண்டும். எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை போன்ற அனைத்துப் பொருள்களுக்கும்ம் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை அரசு கவனத்தில் கொண்டு இறக்குமதி செய்யும் பாமாயிலை தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.