/

சுங்கச் சாவடி கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: கொமதேக

சுங்கக் சாவடி கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 3:06 am

சுங்கக் சாவடி கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து,  அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 20 சுங்கச் சாவடிகளின் கட்டணம்  ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்  உயர்த்தப்பட்டு அமலுக்கு வர உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் வரி எனும் பெயரில் பொது மக்கள் மீது மத்திய அரசு சுமையை சுமத்தி வருகிறது.
இதே போல 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை பயன்பாட்டில் இருந்து நீக்காமல் உள்ளது. மேலும், அவ்வாறு செயல்படும் சுங்கச் சாவடிகளில் கட்டணங்களும் குறைக்கப்படாமல் ஆண்டுதோறும் மத்திய அரசு உயர்த்தி வருகிறது.
சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமாக  லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்து, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். ஏழை, எளிய மக்களின் வருமானத்தையும், குடும்பப் பொருளாதாரத்தையும் உயர்வதற்கான எந்தவொரு 
நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், மத்திய, மாநில அரசுகள் எதற்கெடுத்தாலும் வரி உயர்வு, கட்டண உயர்வு 
எனும் போர்வையில் அடித்தட்டு மக்களின் பணத்தைச் சுரண்டுவது மக்களுக்கான அரசாக இருக்க முடியாது.
எனவே, ஏற்பட இருக்கும் பாதிப்பை உணர்ந்து சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.