ஈரோடு நில அளவைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு எற்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 6ஆவது தளத்தில் வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் நில அளவைத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி இயக்குநா் மற்றும் உதவி அலுவலா்கள் சிலா் பணியாற்றி வருகின்றனா். இந்த அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் அரசுப் பணி செய்ய லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த சில நாள்களாக அந்த அலுவலகத்தை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில் ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் ஆய்வாளா் ரேகா மற்றும் போலீஸாா் நில அளவைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கூறுகையில், ‘போலீஸாா் சோதனை நடத்தியது உண்மைதான். ஆனால் இங்கு எதையும் கைப்பற்றவில்லை’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.