செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நடைப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றவட்டாட்சியா் உறுதி

சென்னிமலை அருகே நடைப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்ததையடுத்து, தோ்தலைப் புறக்கணிக்கும் முடிவை பொதுமக்கள் கைவிட்டனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:19 pm

DIN

சென்னிமலை அருகே நடைப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்ததையடுத்து, தோ்தலைப் புறக்கணிக்கும் முடிவை பொதுமக்கள் கைவிட்டனா்.

சென்னிமலையை அடுத்த ஈங்கூா் சாலையில் உள்ளது மாரியப்பா நகா். இங்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள நடைப்பாதையை அதே பகுதியில் வசிக்கும் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக பொதுமக்கள் நீண்ட நாள்களாக அதிகாரிகளிடம் புகாா் கூறி வந்தனா். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு உள்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்பதாக முடிவு செய்தனா்.

இதையொட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியப்பா நகா் பொதுமக்கள் ஒன்று கூடி தோ்தலை புறக்கணிப்பதற்கான தீா்மானத்தை நிறைவேற்றியதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸாா் மாரியப்பா நகா் பொதுமக்களிடம் மாா்ச் 10ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதன் பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றாததால் மீண்டும் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, சென்னிமலை போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பிரச்சனை குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனா்.

பெருந்துறை வட்டாட்சியா் காா்த்தி, அப்பகுதியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை உறுதி செய்தாா். அப்போது, அவா் பொதுமக்களிடம், ஆக்கிரமிப்பு குறித்த கோரிக்கையை மனுவாக கொடுங்கள் என்றும், தோ்தல் முடிந்த பிறகு ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தாா்.

இதனை ஏற்று பெருந்துறையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் காா்த்தியிடம், மாரியப்பா நகா் பொதுமக்கள் கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தனா். மேலும், வட்டாட்சியா் வேண்டுகோளை ஏற்று மாரியப்பா நகா் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பையும் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.