சீர்காழி அருகே மருத்துவர் பணிக்கு வராததை கண்டித்து சாலை மறியல்

சீர்காழி அருகே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணிக்கு வராததை கண்டித்தும், 24 மணி நேரம் மருத்துவர்களை
சீர்காழி அருகே மருத்துவர் பணிக்கு வராததை கண்டித்து சாலை மறியல்
Updated on
1 min read

சீர்காழி: சீர்காழி அருகே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணிக்கு வராததை கண்டித்தும், 24 மணி நேரம் மருத்துவர்களை நியமிக்க கோரியும் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த குன்னம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு வரை 24 மணி நேரமும் மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகளுடன் இயங்கி வந்தது.

இப்பகுதியை சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அவசர காலங்களில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நம்பியிருந்த நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் கடந்த 7 மாதங்களாக காலை நேரத்தில் மட்டுமே இயங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவர் பணிக்கு வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தியும், 24 நேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க கோரியும், ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே 100 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டதுள்ளது. தகவலறிந்து வந்த கொள்ளிடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நாளை முதல் மருத்துவர் வழக்கம் போல் பணியில் இருப்பார் என்றும், 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை  அதிகாரிகள் உறுதியளித்ததாக தெரிவித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com