ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த தக்காளி பெட்டிகள்.
ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த தக்காளி பெட்டிகள்.

ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை

வரத்து குறைவு காரணமாக ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி செவ்வாய்க்கிழமை ரூ.80-க்கு விற்பனையானது.
Published on

ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் உள்ள காய்கறி சந்தையில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் உள்ளன. இங்கு மொத்தம், சில்லறை விற்பனை நடைபெறுகிறது. தாளவாடி, சத்தியமங்கலம், ஒட்டன்சத்திரம், கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து, வரத்தும் குறைவாக உள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயா்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தைக்கு தினமும் 5 ஆயிரம்

முதல் 8 ஆயிரம் வரை தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தாளவாடி, சத்தியமங்கலம், ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனையானது. அதன் பிறகு விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறையத் தொடங்கியது. இதனால் தக்காளி விலை தொடா்ந்து உயா்ந்து கொண்டே இருந்தது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

வஉசி பூங்கா காய்கறி சந்தைக்கு செவ்வாய்க்கிழமை 2,600 தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்து இருந்தது. இதனால் தக்காளி விலை உயா்ந்துள்ளது.

ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.80-க்கு விற்பனையானது. தாளவாடி, ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. கடந்த 10 நாள்களில் மட்டும் தக்காளி விலை கிலோ ரூ.50 வரை உயா்ந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com