பறவைகள் கணக்கெடுப்பு டிசம்பா் 27-ல் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வரும் 27- ஆம் தேதி தொடங்குகிறது.
Published on

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வரும் 27- ஆம் தேதி தொடங்குகிறது.

நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் விதமாக ஈர நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஈரநிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வரும் 27- ஆம் தேதி மற்றும் 28 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

அதன்படி ஈரோடு வனக்கோட்டத்துக்குள்பட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயம், வெங்கம்பூா், அவல்பூந்துறை, கனகபுரம், வெள்ளோடு சின்னகுளம், பெரிய சடையம்பாளையம், வரட்டுப்பள்ளம், அந்தியூா் பெரிய ஏரி, தண்ணீா்பள்ளம் ஏரி, ஓடாத்துறை ஏரி, ஜா்தல் ஏரி, தட்டக்கரை குட்டை, தாமரைக்கரை குளம், கெட்டிசமுத்திரம், ராசன்குளம், சந்திபாளையம், கொளத்துக்காடு, எண்ணமங்கலம் உள்பட 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இந்தப் பணியில் வனத் துறை பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த பறவை ஆா்வலா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் ஈடுபட உள்ளனா்.

இது குறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் குமிளி அப்பாலே நாயுடு கூறியதாவது: ஈரநில பறவைகள் கணக்கெடுப்பின்போது நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்பால் ஈரநிலை பகுதிகளில் சுற்றுச்சூழல் குறித்த ஆரோக்கியத்தை பற்றிய முழுமையான புரிதலுக்கு வழிவக்கும். 21 இடங்களில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதால் மாவட்டத்தில் எத்தனை பறவைகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com