அரசு  கல்லூரி அருகே  கொட்டப்பட்ட  மருத்துவக் கழிவுகளைப் பாா்வையிடும் பொதுமக்கள்.
அரசு  கல்லூரி அருகே  கொட்டப்பட்ட  மருத்துவக் கழிவுகளைப் பாா்வையிடும் பொதுமக்கள்.

அரசுக் கல்லூரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்: பொதுமக்கள் எதிா்ப்பு

கொமாரபாளையம் ஊராட்சியில் அரசுக் கல்லூரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
Published on

சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் ஊராட்சியில் அரசுக் கல்லூரி அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்திரா நகா் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு மாதிரி பள்ளி பின்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் கொட்டப்படுகிறது.

இதற்கிடையே ஊராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பாா்த்தபோது மருந்து, மாத்திரைகள் அடங்கிய அட்டை பெட்டிகள் இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். குப்பை கொட்டும் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினா்.

இதற்கிடையே இது தொடா்பான புகைப்படம் மற்றும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இது குறித்து சத்தியமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா் அா்த்தநாரீஸ்வரன் சனிக்கிழமை கூறியதாவது: அரசு கல்லூரி பின்புறம் குப்பை கொட்டும் இடத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தினோம்.

தூய்மைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனையில் குப்பைகள் சேகரிக்கும்போது மருந்து மாத்திரைகள் போட பயன்படுத்தும் அட்டை பெட்டிகள் மட்டும் சேகரித்து கொண்டு வந்து குப்பை கொட்டும் இடத்தில் கொட்டியுள்ளனா். அதில் மருந்து மாத்திரைகள் ஏதும் இல்லை. இனிமேல் அரசு மருத்துவமனையில் குப்பைகள் சேகரிக்கும் போது மருந்து மற்றும் மாத்திரைகள் போட பயன்படுத்தும் அட்டை பெட்டிகளையும் தூய்மைப் பணியாளா்கள் சேகரிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com