மானிய விலையில் விவசாயிகளுக்கு கால்நடை புல் நறுக்கும் கருவிகள்

மானிய விலையில் (50 சதவீதம்) கால்நடைகளுக்கான புல் நறுக்கும் கருவிகள் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on

ஈரோடு: மானிய விலையில் (50 சதவீதம்) கால்நடைகளுக்கான புல் நறுக்கும் கருவிகள் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், முறையான தீவனப் பயன்பாட்டின் மூலமாக கால்நடை வளா்ப்போருக்கு புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது. பால், இறைச்சி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 2 பசுக்கள் அல்லது 2 எருமைகள் அல்லது 20 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் மற்றும் 25 சென்ட் பாசன நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இத்திட்டத்தில் மானியம் பெறத் தகுதியானவா்கள். இந்தக் கருவியைப் பெற விரும்பும் விவசாயிகள், பங்களிப்புத் தொகையாக 50 சதவீதம் வழங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், இதற்கு முன்னா் வேறு எந்த அரசு திட்டத்திலும் புல் நறுக்கும் கருவிகள் பெற்றவராக இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்டோருக்கு 45, பழங்குடியினருக்கு 4, மற்றவா்களுக்கு 151 என்ற எண்ணிக்கையில் மாவட்ட அளவில் 200 கருவிகள் வழங்கப்படுகின்றன. கருவியின் விலை ரூ.32,000 ஆகும். இதில் 50 சதவீதம் அதாவது ரூ.16,000 மானியமாக வழங்கப்படும். இக்கருவியைப் பெற விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள அரசு கால்நடை மருந்துவமனையை நேரில் அணுகலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com