சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்து நாய்களை கடித்துக் கொன்ற சிறுத்தை
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பட்டரமங்கலத்தில் புகுந்த சிறுத்தை, விவசாயத் தோட்டத்தை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாய்களை கடித்துக் கொன்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி சுற்றுவட்டார கிராமங்களில் முக்கியத் தொழிலாக ஆடு, மாடு வளா்ப்பு உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதற்கிடையே பண்ணாரி வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை, அருகே உள்ள பட்டரமங்கலம் ஊருக்குள் புகுந்து சாலையில் நடமாடிய காட்சி அங்குள்ள விவசாய தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதில் சாலையில் நடமாடிய சிறுத்தையை கண்ட காவல் நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த சிறுத்தை, அந்த நாய்களை கடித்துக் கொன்றது. இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வேறு இடத்தில் விடுமாறு, வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

